உடலுக்குப் போதுமான கால்சியம் சத்தை அபரிமிதமாக அளிக்கும் ராகியில் இனிப்பு வகைகள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. காரசரமான உணவையும் செய்யலாம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கார ராகி சேமியா.
என்ன தேவை?
ராகி சேமியா – 75 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்றில் பாதி
காய்ந்த மிளகாய் – 2
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ராகி சேமியாவை ஐந்து நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த ராகியை இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், இஞ்சி விழுது, காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்த ராகி சேமியாவை உதிர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைக்கும் முன்பு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான கார ராகி சேமியா தயார்.
குறிப்பு: ராகி சேமியா குழையாமல் இருக்க, இட்லித் தட்டில் வைத்து, வேக வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய்க்குப் பதில் பச்சைமிளகாயையும் சேர்க்கலாம்.