காஞ்சிபுரம், குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
ஆலை விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் மார்ச் 22 ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடமே முழுமையாக சிதறி தரைமட்டமானது.
இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிப்பு அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
நிவாரண நிதிகளுக்கான காசோலையைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன்(50), ஜெகதீசன்(35) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் தீர்மானம்
முன்னதாக பட்டாசு ஆலை வெடி விபத்துகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில்,
மார்ச் 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
பட்டாசு ஆலைகளில் விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் வலியுறுத்தினர்.
இதற்கெல்லாம் பதிலளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலைகள் வெடி விபத்துகளைத் தடுக்க கருத்தரங்கங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் சிறிய பட்டாசு ஆலைகள் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்துக் கொண்டு பணிபுரிந்து வரும் காரணத்தால் தான் இது போன்ற விபத்துகள் நடைபெற்று வருகிறது” என்று விளக்கம் அளித்திருந்தார்.
மோனிஷா
சபரிமலை பங்குனி உத்திரம்: இன்று நடை திறப்பு!
இ-சேவை மையங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!
