கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மேலும் நான்கு பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி பள்ளி முன்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இதில் கலவரக்காரர்களால் பள்ளியிலிருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ,போலீஸ் பேருந்து உள்ளிட்டவை சூறையாடப்பட்டதோடு தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிறார்கள் உட்பட 399 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்களை எரித்தது, பள்ளி பேருந்து மற்றும் போலீஸ் பேருந்தை தீயிட்டு கொளுத்தியது, போலீசார் மீது கற்களை வீசி தாக்கியது உள்ளிட்ட முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸ் தேடி வந்தது.
சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன், உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ், வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி,
தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மணி ஆகிய நான்கு பேரையும் எஸ்.பி பகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சி ஷர்வன்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்று (செப்டம்பர் 16) உத்தரவிட்டார்.
கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 8 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா