கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த 38 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். “கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.”
என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாராயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களில் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சி மரணம்… சைலண்ட் மோடில் திரை பிரபலங்கள் : ஜெயக்குமார் கண்டனம்!
”கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” : ஸ்டாலின் வேதனை!