மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
அதன்பிறகு பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஒரு நாள் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணியின் உத்தரவின்பேரில் 5 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி மனுதாக்கல் செய்தனர்.
இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்தபோது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்தநிலையில் 4-வது முறையாக அவர்களின் ஜாமீன் மனுக்கள் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததையடுத்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த மனுக்கள் நாளை(ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலை.ரா
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் போலீஸ்