கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு “கலை இளமணி” விருதும், 19 முதல் 35 வயது வரை “கலை வளர்மதி” விருதும், 36 முதல் 50 வயது வரை “கலை சுடர்மணி” விருதும், 51 முதல் 60 வயது வரை “கலை நன்மணி” விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு “கலை முதுமணி” விருதும் வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயது வரம்போ, எந்தவித தகுதியோ, எந்தவித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை.
2019-2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது.

இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, 2019 – 2020 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று(நவம்பர் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,
கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்?
விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது.
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சாதனைகள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கலைமாமணி விருது, தற்போது 2 படங்களில் நடித்து விட்டால் அவர்களுக்கு விருது வழங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர்,
தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கலை.ரா