கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 154வது தைப்பூச விழா நடைபெற்று வருகிறது. Jyoti Darshan at Vadalur Sathya Gnana Sabha
இறைவன் அன்பு வடிவானவன்… அவன் எங்கும் ஜோதி வடிவமாக நிறைந்து இருக்கிறான் என்ற சன்மார்க்க நெறியை தோற்றுவித்தவர் வள்ளலார். 1874ல் ஜனவரி 30ஆம் தேதி புனர்பூசமும் பூசமும் இணைந்த நாளில் அவர் சித்தி அடைந்தார்.
இதை நினைவு கூறும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
7 திரைகள் என்னென்ன? Jyoti Darshan at Vadalur Sathya Gnana Sabha

அதாவது, கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என ஏழு வண்ணங்களில் திரைகள் விலக்கப்பட்டு ஜோதி காண்பிக்கப்படும்.
கருப்புத்திரை- மாயையை விலக்கும் (அசுத்த மாயா சக்தி),
நீலத்திரை – உயர்ந்த நோக்கத்துக்கு ஏற்படும் தடையை விலக்கும் (சுத்த மாயா சக்தி),
பச்சைத்திரை – உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும் (கிரியா சக்தி),
சிவப்புத் திரை – உணர்வுகளைச் சீராக்கும் (பரா சக்தி),
பொன்னிறத்திரை – ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும் (இச்சா சக்தி),
வெள்ளைத் திரை – மாயைகளை விலக்கி இறை நிலையை உணரச் செய்யும் (ஞான சக்தி).
இந்த ஆறு வண்ணங்களும் இணைந்த ஏழாவது கலப்புத்திரை – உலக மாயைகளை விலக்கும் (சிற்சத்தி) என ஒவ்வொரு திரைக்கு ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன.
அதாவது ஏழு நிலைகளை கடந்தால் ஜோதி வடிவமான இறைவனை அடையலாம் என்பது பொருள்.
இந்த நிலையில் தைப்பூசமான இன்று காலை 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.
இதை காண்பதற்கு வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து, ஜோதியை தரிசித்தனர்.
அப்போது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கின்ற மந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஒலித்தது.
காலை 6 மணியை தொடர்ந்து நண்பகல் 1மணி மற்றும் இரவு 7 மணி 10 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு வடலூரில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தை மாதத்தை தவிர மற்ற மாதங்களில் பூச நட்சதிரத்தின் போது 6 திரைகள் மட்டுமே விலக்கப்படும் என்பது குறிப்பிடத்தகக்து. Jyoti Darshan at Vadalur Sathya Gnana Sabha