பாலியல் விவகாரங்களைப் பட்டியல் போட்டு எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சித்து வரும் நிலையில்… பாலியல் வழக்குகளில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பாராட்டியுள்ளார். Manjula has praised the Tamil Nadu government
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் கடந்த 2023 இல் பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.
இதுதொடர்பாக அவர் கல்லூரி முதல்வரிடமும் மற்றும் காவல் துறையிடமும் புகார் அளித்தார்.
ஆனால் அதன்மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக வேறொரு ஊழியர் மூலம் பொய் புகார் பெற்று, பாலியல் புகார் கூறிய பெண் மருத்துவ அதிகாரியையே, சஸ்பெண்ட் செய்தார் கல்லூரி முதல்வர்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவ அதிகாரி மனு தாக்கல் செய்தார். அதில், “பாலியல் புகார் அளித்த என் மீது தவறான குற்றச்சாட்டில் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்துள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் என்னை பணியில் அமர்த்தி, எனக்கான பணிக்கொடைகளை பெற்றுத்தர வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து இடைநீக்கம் செய்ததில் முகாந்திரம் இல்லை என்று கூறி இடைநீக்க உத்தரவை ரத்து செய்தார் நீதிபதி.
அப்போது, பணியிடங்களில் பாலியல் தொந்தரவு புகார்கள் தொடர்பாக இன்டர்னல் கமிட்டி அமைத்து விசாரிப்பது தொடர்பாக போலீசாரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி மஞ்சுளா, பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை கருத்தில் கொண்டு பல்வேறு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு 2024 நவம்பர் மாதம், வழங்கியிருந்தார். இது தொடர்பாக அவர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் வாதம்!
இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 17) மீண்டும் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “போஷ் சட்டத்தின் ( POSH ACT) விதிகளை சட்டத்தில் சொல்லியுள்ளபடி தான் செயல்படுத்த முடியும், இதுகுறித்து அரசின் விளக்கத்தை அடுத்த விசாரணையில் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
மாநில அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், “நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி அதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்கிறோம்” என பதிலளித்தார்.
காவல்துறை இயக்குநர் சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜரானார்.

அவர், “நீதிமன்ற உத்தரவின்படி போஷ் ( POSH ACT) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரங்களை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காவல் துறையினரிடமிருந்தும் பெறுவதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “இப்போது பெண்களிடையே நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் இடங்களில் மட்டுமின்றி மற்ற வகைகளிலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற பாலியல் புகார்களுக்கு தைரியமாக புகார் கொடுக்க முன்வருகிறார்கள். காவல்துறையும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதி மஞ்சுளா குறுக்கிட்டு, “காவல் துறையில் டிஐஜி அந்தஸ்தில் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி மீது வந்த பாலியல் புகாரை அடுத்து உடனடியாக அவரை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்ததை படித்தேன்” என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, “காவல்துறை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி மீது முறையாக புலன்விசாரணை செய்து நீதிமன்றம் மூலம் மூன்று ஆண்டு காலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டது” என சுட்டிக்காட்டினார். (முன்னாள் ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு)
“மேலதிகாரிகள் மீது புகார் தெரிவித்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பெண்கள் தற்போது புகார் கொடுக்க முன்வருகிறார்கள்” என்றும் குறிப்பிட்டார் ஜின்னா.
விழிப்புணர்வு அதிகரிப்பு!Manjula has praised the Tamil Nadu govern
மேலும், “பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுகிற ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டுமின்றி அவர்களுடைய கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி அரசின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தற்போது பலரும் அச்சமின்றி புகார் தெரிவிக்க முன்வருகின்றனர்” என்று கூறினார் அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா.
அப்போது நீதிபதி ” அண்ணா பல்கலைகழக பாலியல் குற்றச்சாட்டில் காவல்துறையினர் எடுத்த விரைவு நடவடிக்கைகள், டி.ஐ.ஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி என பாராமல் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது” என்றார்.
மேலும், “மத்திய மாநில அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள் அச்சமின்றி தைரியமாக வேலைக்கு செல்லும் நிலையை உருவாக்க வேண்டும்.

விழிப்புணர்வை அதிகரிக்க மேம்பட அதற்கென நிதியினை ஒதுக்கிட வேண்டும். வேலை செய்யும் இடங்களில் அமைந்திருக்கக் கூடிய அனைத்து உள் புகார் குழு ( internal complaints committee) விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
போஷ் சட்டத்தின் அடிப்படையில் விதிகளை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி மஞ்சுளா வழக்கை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Manjula has praised the Tamil Nadu government