ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூ.17.7 கோடி மொத்த வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இது கடந்த நிதியாண்டை விட ரூ.3.7 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் சத்குருவின் ஆலோசனையின்படி, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1,063 விவசாய உறுப்பினர்களை கொண்டுள்ள இதில் 404 பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தகவலின்படி,
வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனம் தேங்காய், தேங்காய் மட்டை, காய்கறிகள், தேங்காய் எண்ணெய், உரக் கடை எனப் பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டி வருகிறது.
கடந்தாண்டு இதில் அதிகபட்சமாக, தேங்காய் விற்பனையின் மூலம் ரூ.14.92 கோடியும், உரக் கடையின் மூலம் ரூ.1.26 கோடி கோடியும் மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 5621 டன் தேங்காய், 7066 டன் தேங்காய் மட்டை, 252 டன் காய்கறிகள், 2.7 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவை இந்த நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் பொதுக்கூட்டத்தில் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுகையில்,
“ஈஷாவின் ஆதரவோடும், விவசாய உறுப்பினர்களின் பங்களிப்போடும் நாம் கூடிய விரைவில் ரூ. 50 கோடி ஆண்டு மொத்த வருவாய் என்ற இலக்கை அடைய திட்டமிட்டு வருகிறோம்.
நம்முடைய விவசாயிகளின் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், தேங்காய் மற்றும் காய்கறிகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
நாம் தொடர்ந்து நல்லபடியாக விவசாயம் செய்ய வேண்டுமானால், மண்வளம் மிகவும் அவசியம். எனவே, சத்குரு ஆரம்பித்துள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்தின் பரிந்துரைகளின்படி மாதிரி பண்ணைகளை நம்முடைய கிராமங்களில் உருவாக்க வேண்டும்.
மண் பரிசோதனை செய்வதை எளிமையாக்கும் வகையில், ‘நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை’ உருவாக்கவும் நம்முடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என்றார்.
-ராஜ்
இந்தியாவில் குறைந்து வரும் பேறுகால தாய், சேய் இறப்பு விகிதம்: காரணம் என்ன?
பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- கேசவ விநாயகம் மோதல் எதிரொலி: தமிழக பாஜகவில் திடீர் மாற்றம்!