கோவை மத்தியச் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று மொத்தம் 2026 பேர் உள்ளனர்.
விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் கைதிகளைச் சந்தித்துப் பேச அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை உறவினர்களைப் பார்த்துப் பேச அனுமதி அளிக்கப்படுகிறது.
உறவினர்கள் கைதிகளைச் சந்திக்க வேண்டும் என்றால் சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்து அனுமதி பெற வேண்டும். சிறை அதிகாரிகளின் அனுமதியைப் பெற்ற பிறகுதான் இவர்கள் சந்தித்துப் பேச முடியும்.
கைதிகளும், உறவினர்களும் சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தில் நின்று தான் பேசுவார்கள்.

வழக்கறிஞர்களும் இதே போன்று இரண்டு மீட்டர் தூரத்தில் நின்றுதான் பேச வேண்டும். இவ்வாறு பேசும் போது மற்ற கைதிகள் மற்றும் உறவினர்கள் பேசிக் கொள்வது அனைவருக்கும் கேட்கும்.
மேலும் வயதான கைதிகள் உறவினர்கள் பேசுவதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமலும் வயதான உறவினர்கள் கைதிகளிடம் பேசும் போது மிகவும் சத்தம் போட்டு பேச வேண்டிய சூழல் இருக்கிறது.
இந்நிலையில், கோவை சிறைத் துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் உத்தரவின்படி சிறை சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் ஜெயிலர் சிவராஜ் ஆகியோர் மேற்பார்வையில் இதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இரு பக்கத்திலும் இன்டர்காம் வைத்து கைதிகளும் உறவினர்களும் எளிதில் பேசுவதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாகக் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்தம் 8 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது.
மோனிஷா
எடப்பாடியின் பேனர் புகார்: மறுக்கும் தமிழக அரசு!
டிஜிட்டல் திண்ணை: அமித்ஷாவிடம் காரம்… ஆளுநரிடம் பரிகாரம்: எடப்பாடி ராஜ்பவன் ரகசியம்!