ஃபெடரல் வங்கியில் கொள்ளை போன நகைகள் அனைத்தும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் சேவை மைய மேலாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர், தனது 2 நண்பர்களுடன் நேற்று (ஆகஸ்ட் 13) ரூ.16 கோடி மதிப்புடைய 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் வாகனத்தில் தப்பி சென்றார்.
குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை போலீசார் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 2 கொள்ளையர்களை பிடிக்க சென்னை அருகே உள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழக எல்லையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஃபெடரல் வங்கி நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “வங்கியில் கொள்ளை போன நகைகள் அனைத்தும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு முடிந்த பிறகு நகைகள் மீட்கப்பட்டால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நகை திரும்ப கொடுக்கப்படும்.
கொள்ளை போன நகைகள் கிடைக்காத பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கொடுக்கப்படும்.
எனவே வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம்” என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- க.சீனிவாசன்
கீழடி அகழ்வாய்வு சரியான இடத்தில் தான் நடைபெறுகிறது: தங்கம் தென்னரசு