சென்னை மதுரையில் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே அதிக வெப்பநிலை பதிவாகி வந்தது. ஈரோடு, வேலூர், கரூர், மதுரை, சென்னை, நெல்லை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியும் வெயில் கொளுத்தியது.
இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை யாரும் அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எனினும் கட்டுமான பணி போன்ற வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் இந்த வெயில் காரணமாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் நேற்று (மே 15) திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்குக் கட்டுப்பாடு விதித்து தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எந்த வகையான திறந்த வெளி கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டது.
மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (மே 15) வழக்கம் போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டுமான நிறுவனங்கள் வழக்கம் போல் தங்களது கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம். வெப்ப அலை மீண்டும் அதிகரிக்கும் வரை வழக்கம் போல பணிகளை மேற்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை மழை ஆங்காங்கே பெய்யதொடங்கி இருப்பதால் பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்திருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…