தென் தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 1) மற்றும் நாளை மறுதினம் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் 13 கி.மீ வேகத்தில் இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று அதிகாலை நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலையின் தென் மேற்கு திசையில் 455 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென் மேற்கே 680 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
தொடர்ந்து இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கும் எனவும் பின்னர் தெற்கு இலங்கை கடற்கரை நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் இரண்டு நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,
தென் தமிழகத்தில் கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்க கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
செல்வம்
விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: லட்சக்கணக்கில் பாதிப்பு!