பெண்கள் பணிபுரியும் இடங்களில்… இதுவும் பாலியல் துன்புறுத்தல்தான் : நீதிபதி அதிரடி!

Published On:

| By Kavi

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும், விரும்பத்தகாத செயல் அல்லது சொல்லும் கூட பாலியல் துன்புறுத்தல் தான் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில் எச்.சி.எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிராக அந்த நிறுவனத்தில் பணி புரியும் மூன்று பெண்கள் பாலியல் புகார் அளித்தனர்.

இதை விசாரித்த அந்த நிறுவனத்தின் விசாகா கமிட்டி, அந்த மார்க்கெட்டிங் அதிகாரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ வழங்கக் கூடாது என்று பரிந்துரைத்தது.

இதை எதிர்த்து மார்க்கெட்டிங் அதிகாரி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று அதில் தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம் விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையை ரத்து செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார்.

அப்போது எச்.சி.எல்.நிறுவனம் சார்பில், “குற்றம் சாட்டப்பட்ட மார்க்கெட்டிங் அதிகாரி பெண்கள் வேலை பார்க்கும் இருக்கைக்கு பின்னால் நின்று கொண்டு அவர்களை தொட்டு பேசுவதாகவும், கை குலுக்க கூறுவதாகவும், ஆடை அளவைக் கேட்டு தவறாக நடந்து கொண்டதாகவும் வாதிடப்பட்டது. .

விசாகா குழு இயற்கை நீதி கொள்கையின் படி தான் விசாரித்தது என்றும், மூன்று பெண்களும் சம்பந்தப்பட்ட நபரின் செயல் மற்றும் வார்த்தைகள் தங்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விசாரணை குழு முன்பாக தெளிவாக கூறினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த அதிகாரி தரப்பில், பாலியல் துன்புறுத்தல் செய்யும் எந்த உள்நோக்கமும் இல்லை. உயர் அதிகாரி என்ற முறையில், அப்பெண்களின் இருக்கைக்கு பின் நின்று கண்காணித்ததாக வாதிடப்பட்டது.

இந்நிலையில் மார்க்கெட்டிங் அதிகாரி தரப்பு வாதத்தை கேட்க மறுத்த நீதிபதி, “பணியிடங்களில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் செயல் அல்லது சொல்லும் கூட சட்டப்படி பாலியல் துன்புறுத்தல் தான் என்று குறிப்பிட்டார்.

மேலும், தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என்றும் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்கள், ஒருவரது நடத்தையை எப்படி உணர்கிறார் என்பதே முதன்மை. துன்புறுத்துபவர்களின் நோக்கங்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel