ஹோட்டல் வணிகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு களமிறங்க தயங்காது என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி கோவையில் நடந்த தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து முறையிட்டார்.
அதைத்தொடர்ந்து அவர் நிர்மலா சீதாராமனை தனியே சந்தித்து மன்னிப்பு கூறினார்.
இந்நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.
இன்று (செப்டம்பர் 14) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளாக வணிகர் சங்க பேரமைப்பு ஜிஎஸ்டி வரி முரண்பாடுகளை நீக்க வேண்டுமென மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்து வருகிறது. அவரும் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
இந்த சூழலில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி வரியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று வழக்குமொழியில் பேசியிருந்தார். அவர் பேசிய தொனி மாறுப்பட்டிருக்கலாமே தவிர கருத்து ஒன்றுதான். இதை யாரும் அரசியலாக்க வேண்டியதில்லை.
இதனால் ஹோட்டல் வணிகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு களம் இறங்க தயங்காது. வணிகர்களுக்கான இடையூறுகளை தகர்த்தெறிய பேரமைப்பு கடமைப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பேசு பொருளான நிலையில், அரசியல் யூகங்களுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று அன்னபூர்ணா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அவரும் டென்ஷன் பார்ட்டிதான்- தோனி ரகசியம் பகிர்ந்த பத்ரிநாத்!
ஹாட்ரிக் வெற்றி… செஸ் ஒலிம்பியாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!