“எனக்கு இந்தி தெரியாது… ஐபிசி என்றுதான் சொல்லுவேன்” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஐபிசி என்று தான் குறிப்பிடுவேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். I will say IPC Justice Anand Venkatesh
குற்றவியல் சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி ஆகிய சட்டங்களுக்குப் பதிலாகப் பாரதிய நியாய, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய சட்டங்கள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
இந்திய தண்டனைச் சட்டங்கள் இந்தியில் மாற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்தநிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பழைய முறைப்படியே நான் இந்த சட்டப்பெயர்களை குறிப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
நேற்று (ஜனவரி 24) நடந்த வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்களிடம், சிஆர்பிசி பிரிவு 468ன் கீழ், குற்றங்களை அறிந்து கொள்வதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட காலவரம்பு தொடர்பாகச் சட்டத்தின் முக்கியமான கேள்விக்குப் பதிலளிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது, “நான் ஐபிசி என்றால் ஐபிசி என்று மட்டுமே குறிப்பிடுவேன். ஏனென்றால் எனக்கு அந்த மொழி(இந்தி) தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் பார் அசோசியேஷன் (எம்பிஏ) செயலாளர் எஸ்.திருவேங்கடம், வழக்கறிஞர் முகமது ரியாஸ், கூடுதல் அரசு வழக்கறிஞர் (ஏபிபி) ஏ.தாமோதரன் மற்றும் பலர் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைக் குறிப்பிட்டு நீதிமன்றத்திற்கு உதவினர்.
சி.ஆர்.பி.சி.யில் செய்யப்பட்ட பல்வேறு திருத்தங்களையும் வழக்கறிஞர்கள் நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.தாமோதரன், சிஆர்பிசிக்கு மாற்றாக இருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 சட்டத்தைப் பற்றிப் பேசிய போது, இந்த சட்டப்பெயரை சொல்லாமல் புதிய சட்டம் என்று குறிப்பிட்டு பேசினார். இந்த புதிய சட்டத்தை ஆராயுமாறு நீதிபதியிடம் கூறினார்.
அப்போது அவர் புதிய சட்டப்பெயரை உச்சரிக்கச் சிரமப்படுவதைக் கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,
“வழக்கறிஞர் தாமோதரன் புத்திசாலித்தனமாக அதை ‘புதிய சட்டம்’ என்று முடித்துவிட்டார்” என கூற நீதிமன்ற அறையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து, “எனக்கு இந்தி தெரியாது என்பதால் 3 இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களை அவற்றின் அசல் ஆங்கிலப் பெயர்களிலேயே குறிப்பிடுவேன்” என கூறியுள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரூ.21 லட்சம் மதிப்பிலான தார் ஜீப், பைக்… குவியும் பரிசுகள்!
ஆஸ்கார் 2024: 13 பிரிவுகளில் தேர்வான நோலனின் ஓப்பன்ஹைமர்
I will say IPC Justice Anand Venkatesh