கேரளாவை உலுக்கிய நரபலி விவகாரத்தில் குற்றவாளிகள் மூன்று பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பணக்காரராக ஆசைப்பட்டு மசாஜ் சென்டர் உரிமையாளர் பகவத்சிங், அவரது மனைவி லைலா, மந்திரவாதி ரஷீத் ஆகிய 3 பேர் சேர்ந்து 2 பெண்களை நரபலி கொடுத்திருப்பது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் ஆகிய இருவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தனர்.

இவர்களை சினிமாவில் நடிக்க வைத்து லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று நரபலி கொடுத்திருக்கின்றனர்.
தாயை காணவில்லை என்று பத்மாவின் மகன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கொச்சி போலீசார், பகவத்சிங், லைலா, ரஷீத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 2 பெண்களையும், நிர்வாண நிலையில் கை, கால்களை கட்டிப்போட்டு தலையில் சுத்தியால் அடித்தும், கழுத்தை அறுத்தும் நரபலி கொடுத்துள்ளனர்.
அத்துடன் உடல்களை 60 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர்.

நரபலி கொடுக்கப்பட்டவர்களின் ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்தும், இளமையான தோற்றம் வேண்டும் என்பதற்காக அவர்களது சதையை உண்டும் இருக்கின்றனர். மந்திரவாதி ரஷீத் அறிவுரையின் பேரில் இதையெல்லாம் பகவத்சிங்கும், லைலாவும் செய்திருப்பதாக கொச்சி காவல் ஆணையாளர் சகிலம் தெரிவித்தார்.
ரஷீத் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு 75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைதான 3 பேரும் எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் மேலும் சில பெண்களை நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் போலீஸ் காவலில் எடுக்க கொச்சி போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி நீதிமன்றத்தை அணுகியபோது 3 பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கடந்த 5 ஆண்டுகளில் கொச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர். பத்மா, ரோஸ்லி நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் வட்டத்தில் மட்டும் 3 பெண்கள் மாயமாகியிருக்கின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே ரஷீதுக்கும், பகவத்சிங் மற்றும் லைலாவுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
எனவே மற்ற பெண்களையும் இவர்கள் நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நரபலி கொடுப்பது மட்டும்தான் இவர்களது நோக்கமா, கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா, கொலை செய்யப்பட்டவர்களின் தங்க நகை ஆபரணங்கள் எங்கே, என்பது குறித்தும் போலீஸ் விசாரிக்க உள்ளது.
கலை.ரா
சாரு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்: சென்னை சர்ச்சையில் கவிதா பாரதி சாட்டை!
நளினி வழக்கு: நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக தமிழக அரசு பதில்!
தங்கம் விலை உயர்வு : வெள்ளி விலை சரிவு!