அண்ணா. பல்கலை மாணவி விவகாரம் : எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி? – என்.ஐ.சி விளக்கம்!

Published On:

| By christopher

’அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் பதிவான எப்.ஐ.ஆர் வெளியே கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் இன்று (டிசம்பர் 30) விளக்கம் அளித்துள்ளது.

அண்ணா பல்கலை கழக மாணவி கடந்த 23ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் கடந்த 26ஆம் தேதி இணையத்தில் வெளியானது.

காவல் ஆணையர் விளக்கம்!

பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர் வெளியானது எப்படி என்று கேள்வி எழுந்த நிலையில், ’எப்.ஐ.ஆர் வெளியானது சட்டப்படி குற்றம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்ட தரப்பு மூலமாக வெளியாகியிருக்கலாம். இதுதொடர்பாக தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று சென்னை காவல் ஆணையர் அருண் கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றம் கண்டனம்!

தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது. எனினும் வழக்கின் எப்.ஐ.ஆர் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 27ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

அதனை ஏற்று இந்த வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது.

அப்போது அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், “காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர் வெளியிடப்படவில்லை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போது, எப்.ஐ.ஆரை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாத படி மறைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

இரு நாட்களாக நடைபெற்ற விசாரணையில், “மாணவியின் அடையாளத்தை FIRஇல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு; பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. எனவே சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொழில்நுட்பக் கோளாறால் கசிந்திருக்கலாம்!

இந்த நிலையில் எப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

அதில், “தேசிய தகவல் மையத்தில் எஃப்ஐஆர்-ஐ பார்வையிடும் வசதி (VIEW FIR) குறிப்பிட்ட சில பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் போது தானாகவே பிளாக் செய்யப்படும். குறிப்பாக 64, 67,68,70, 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் எஃப்ஐஆர்-ஐ பார்க்கும் வசதி எஸ்சிஆர்பி கொடுத்த வழிகாட்டுதலின்படி முடக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு குறித்து பதியப்பட்ட, எஃப்ஐஆர்-ஐ IPC-யில் ( இண்டியன் பீனல் கோட்) இருந்து BNS ( பாரதீய நியான சன்ஹிதா) குற்றவியல் சட்டத்திற்கு மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தகவல் கசிந்து இருக்கலாம்.

பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட எஃப்ஐஆர் எப்படி வெளியானது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். மேலும் முக்கிய வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளின் எஃப்ஐஆர்களை பார்வையிடுவதை முடக்குவது குறித்து மீண்டும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து தொழில்நுட்ப ரீதியாக சரி செய்ய மாநில குற்றப்பதிவு பணியகத்திடம்(SCRB) அறிவுறுத்தியுள்ளோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி… இன்னும் WTC பைனல் ரேஸில் உள்ளதா இந்தியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share