தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
2024 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டை பிரதமர் மோடி புறக்கணித்திருப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக சென்னைக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பு எதுவும் இடம் பெறவில்லை.
இந்நிலையில் இன்று (ஜூலை 24) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ 2014 -2024 வரையிலான பத்து ஆண்டுகளில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், 1,302 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 2,152 கிமீ தொலைவுக்கான ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது.
687 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ தொலைவுக்கு புதிய பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை பூங்கா, அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, அரக்கோணம், அரியலூர், கோவை சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, மதுரை, ஜோலார்பேட்டை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பூர். திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளது.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட 879 கோடி ரூபாயைவிட 7 மடங்கு அதிகம்” என கூறினார்.
இதே போன்று தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேரள மாநில ரயில்வே திட்டங்களுக்கு இந்த ஆண்டு 3,011 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விஜய் ஆண்டனியின் அடுத்த கட்டம்!
ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்ல முடியாது : நிர்மலா சீதாராமன்