கத்திக்குத்துக்குள்ளான மருத்துவர் பாலாஜிக்கு இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளதாக கிண்டி அரசு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு கத்திக் குத்து நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மருத்துவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில் சேலம் அரசு மருத்துவமனை உட்பட தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
கிண்டி அரசு மருத்துவமனைக்கு வெளியே மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து கிண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, “கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். இரண்டு யூனிட் ரத்தம் செலுத்தியிருக்கிறோம். அனஸ்தீசியா கொடுத்திருப்பதால் தற்போது மயக்க நிலையில் இருக்கிறார். நலமாக இருக்கிறார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபரின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை. இந்த மருத்துவமனையில் 6 முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், நுரையீரல் பாதிப்பு இருந்ததால், தனது தாயை வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு அவரது தாயின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்த மருத்துவமனையில் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. அதுபற்றி கேட்க வந்துதான், இங்கு மருத்துவர் பாலாஜியை குத்தியிருக்கிறார்.
இருவருக்கும் இடையே என்ன விவாதம் நடந்தது என்று மருத்துவர் பாலாஜி கண்விழித்து கூறினால் தான் தெரியவரும். மருத்துவர் பாலாஜியின் ஓபி அறையை மூடிவிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதில், கழுத்து, காதின் பின்பகுதி, நெற்றி, முதுகு மற்றும் தலையில் இரண்டு இடங்களில் கத்திக் குத்து காயம் உள்ளது. வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில் எந்த பிளீடிங்கும் இல்லை என்பது தெரியவந்தது.
மருத்துவர் ஏற்கெனவே ஒரு இதய நோயாளி. அதற்காக ஆபரேஷன் செய்து கொண்டவர். அசிட்டோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், சாதாரண காயங்கள் ஏற்பட்டாலே பிளீடிங் அதிகமாக இருக்கும். இதனால் தான் அவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நல்ல முறையில் அவருக்கு ஆபரேஷன் முடிந்துள்ளது. அனைத்து துறை நிபுணர்களும் சேர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தோம்.
இப்போதைக்கு அவர் மயக்க நிலையில் இருந்தாலும், அவர் நன்றாக இருக்கிறார்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கேரக்டர் ரோல் கனவுகளோடு திரிந்த காலம் ; நாற்பதுக்கு மேல் சிக்சர்களாக விளாசும் எம்.எஸ்.பாஸ்கர்
மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவை அரசுப்பள்ளிகள்- யோகஸ்ரீயால் புகழடைந்த ஆசிரியை!