தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
இந்த வாரம் வியாழக்கிழமை (28/09/2023) மிலாடி நபி வருகிறது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமை (30/09/2023) ஞாயிற்றுக் கிழமை (01/10/2023) என வாரவிடுமுறை நாட்கள் வருகிறது. அதோடு வரும் திங்கள் 02/10/2023 அன்று காந்திஜெயந்தி அன்று அரசு விடுமுறை ஆகும்.
இதனால் தொடர்ந்து 4, 5 நாட்கள் விடுமுறை வருவதால் வேலைக்காக சென்னை உள்ளிட்ட வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 26) தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வரும் விடுமுறை நாட்களில் வெளி ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும்.
இன்றைய தேதியில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 27/09/2023 அன்று 16,980 பயணிகளும் 29/09/2023 அன்று 14,473 பயணிகளும் மற்றும் 03/10/2023 அன்று 7,919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27/09/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும்,
மற்றும் 29/09/2023 அன்று 450 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி. சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 02/10/2023 அன்று திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc official app மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
விஸ்வரூபம் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது!
காவிரி நீர் : கர்நாடகாவில் பந்த் – டெல்டாவில் விவசாயிகள் போராட்டம்!