வேலுமணி வழக்கில் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்
வேலுமணி வழக்கில் விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை ஆய்வு செய்தது.
அதில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது, பல்வேறு பகுதிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக 7 கோடி ரூபாயை அப்போதைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அந்த எஸ்.அர்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியதாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2017-18 நிதியாண்டில் தனக்கு 4 லட்சத்து 92,560 ரூபாய் மட்டுமே வருமானம் என வேலுமணி தாக்கல் செய்த கணக்கை மறு ஆய்வு செய்து,
7 கோடி ரூபாய்க்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று வருமான வரித்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் எஸ்.பி. வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு வேலுமணி தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித்துறை, 2017-18 நிதியாண்டில் எஸ்.பி. வேலுமணியின் மொத்த வருமானம் 7 கோடியே 4 லட்சத்து 66,760 என நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவின் அடிப்படையில் வருமான வரி வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும்,
வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலுமணி தொடர்ந்த வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மோனிஷா
திருமண நாள்: விஜயகாந்த்தை நேரில் வாழ்த்திய எஸ்.ஏ.சி
உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10ல் இருந்து வெளியேறிய அதானி