தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (நவம்பர் 28) தெரிவித்திருந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நாளை (நவம்பர் 30) காரைக்கால், மகாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கிமீ வேகத்தில் வடக்கு – வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று இரவு 11.30 மணியளவில், திரிகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே 330 கி.மீ, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 390 கி.மீ, சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
Deep depression over Southwest Bay of Bengal
The Deep Depression over Southwest Bay of Bengal moved north-northeastwards with a speed of 9 Kmph during past 6 hours and lay centred at 2330 hours IST of yesterday, the 28th November 2024 over the same region near latitude 10.1°N… pic.twitter.com/fWrHcATwJS
— India Meteorological Department (@Indiametdept) November 28, 2024
இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 29-ஆம் தேதி வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தீவிரத்தை தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி காலை 45-55 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால், மகாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ஸ்டீம் பாத்… ஸ்லிம் ஆக்குமா?
டாப் 10 நியூஸ்: ரெட் அலர்ட் முதல் ‘சொர்க்கவாசல்’ படம் ரிலீஸ் வரை!