அதி கனமழை, பலத்த காற்று: மாண்டஸ் புயல் எச்சரிக்கை!

Published On:

| By Kalai

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது அதிகனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் நகர்வு குறித்து சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.

அவர், “மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து புயலாக தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும்,

காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் 180 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கனமுதல் மிக கனமழையும்,

தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் டெல்டா, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்று மதியம் முதல் மாலை வரை மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரையிலும், மாலை முதல் நாளை அதிகாலை வரை 85 கிலோ மீட்டர் வேகம் வரையிலும், நாளை காலை நேரத்தில் படிப்படியாக 65 கிலோமீட்டர் வேகத்திலும் குறைந்து காற்று வீசக்கூடும்.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடாப்பகுதிகளை பொறுத்தவரை இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை பலத்த காற்றானது வீசக்கூடும். மீனவர்கள் 10 ஆம் தேதி வரை கடலுக்குச் செல்லவேண்டாம் என்ற அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 3 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும்.

அதன் காரணமாக வடதமிழக உள்பகுதிகள் மற்றும் தெற்கு கர்நாடகப் பகுதிகளில் 10 ஆம் தேதி வரை கன முதல் மிகக் கனமழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்” என்று தெரிவித்தார்.

கலை.ரா

நெருங்கும் புயல்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

தீவிர புயலாக இருந்து மாண்டஸ் வலுவிழந்தது!