நாளை தீபாவளி பண்டிகை நாளில் மட்டுமல்ல… விடுமுறை, விசேஷ தினங்களில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு மறுநாள் ‘மந்தமாக இருக்கிறது, சாப்பிடப் பிடிக்கவில்லை’ என்று பட்டினி கிடக்கிறார்கள் பலர்.
இது சரியான முறையா… இதை எப்படித் தவிர்ப்பது? இதற்கான தீர்வு என்ன?
விசேஷங்களும் விருந்துகளும் விடுமுறைகளும் நம் வாழ்வோடு ஒன்றியவை. விடுமுறை மற்றும் விசேஷ நாள்களில் ஒருவேளைக்கு பலமான விருந்து சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் பட்டினி கிடப்பதைத் தொடர்ந்து பின்பற்றுவது சரியான பழக்கமல்ல.
“இந்தப் பழக்கத்தால் ‘அசிடிட்டி’ எனப்படும் அமிலம் சுரக்கும் பிரச்சினை வரும். ஒருவேளை பலமாக சாப்பிட்டுவிட்டதாக உணர்ந்தால் அடுத்தவேளைக்கு குறைவான உணவு சாப்பிடலாம்.
உதாரணத்துக்கு மதியத்துக்கு சாம்பார், கூட்டு, பொரியல், ஸ்வீட் என ஃபுல் மீல்ஸோ அல்லது பிரியாணியோ சாப்பிட்டால், மாலை வேளை எதையும் சாப்பிடாமல், இரவுக்கு சூப் அல்லது பழம் மட்டும் சாப்பிடலாம்.
இப்படிச் செய்தால் மறுநாள் காலை எழுந்திருக்கும்போது புளித்த ஏப்பம், வயிற்று எரிச்சல் போன்றவை இருக்காது.
நம்முடைய ஒவ்வொரு வேளை உணவுமே பேலன்ஸ்டாகதான் இருக்க வேண்டும். இரவு நேர பார்ட்டி, விருந்துக்குப் போவதாக இருந்தால் அன்றைய தினம் காலை மற்றும் மதியத்துக்கு மிதமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
இரவு உணவை முடித்த பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டும்.
இரவில் தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு, தாமதமாகத் தூங்கச் செல்வதால் அசிடிட்டி பிரச்னை வரும் என்பதால் அதையும் தவிர்க்க வேண்டும்.
விசேஷங்களும் சரி, விருந்தும் சரி, விரதமிருப்பதும் சரி அளவோடு இருக்க வேண்டும். ஒரே வேளையில் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது இன்சுலின் ஹார்மோனை தூண்டும்.அதன் விளைவாக உணவு கொழுப்பாக மாற்றப்படும்.
விருப்பமான உணவுகளை வாரத்தில் ஒருநாள் சாப்பிட்டுக் கொள்ளலாம், அதுவும் அளவோடு” என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.