தமிழகத்தில் கோடைக்கு நிகராக கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக பரமத்தியில் 36.5 (97.5 பாரன்ஹீட்) டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. heat accelerates in tamilnadu
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அடர்ந்த பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் எதிரில் வரும் வாகனங்களே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் கண்ணை மறைத்த காட்சிகளையும் காண முடிகிறது.
அதேவெளையில் பகலில் அதிக அளவும் வெயிலும் வாட்டி வருவதால், மக்கள் கோடைக்காலத்திற்கு முன்பே சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கோடைக்கு நிகராக நேற்று அதிகப்பட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 36.5 (97.5 பாரன்ஹீட்) டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் இன்று (பிப்ரவரி 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும். அங்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். மலைப்பகுதிகளில் குளிர்ந்த வெப்பநிலை பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை முற்பகுதியில் அதிக வெப்பநிலை! heat accelerates in tamilnadu
மேலும் வானிலை தொடர்பாக தனியார் வானிலை ஆர்வலர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கூறுகையில், “தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகளவு இருக்கும். வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வறண்ட கிழக்கு காற்றின் வருகை இருப்பதால் பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உணரப்படும்.
வறண்ட வானிலையுடன் வெப்பமான சூழல் தொடர்வதாலும், தெளிந்த வானிலை காணப்படுவதாலும், வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடைக்காலத்தின் முற்பகுதியில் அதாவது மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக வெப்பநிலை பதிவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேபோல், வெயில் காலம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.