கிச்சன் கீர்த்தனா : சிக்கன் சால்னா

Published On:

| By Minnambalam

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரோட்டாவுடன் பரிமாறப்படும் சால்னாவுக்கு மயங்காதவர் இருக்க முடியாது. பல ஊர்களில் பலவிதமான முறைகளில் செய்யப்படும் சால்னாவை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம். இந்த சிக்கன் சால்னா, பரோட்டா மட்டுமன்றி சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சேர்த்து ருசிக்கலாம்.

என்ன தேவை?

சிக்கன் – அரை கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)
பச்சை மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – முக்கால் டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 100 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். சிக்கனை நன்றாகக் கழுவி ஒரு பவுலில் சேர்த்து, அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

இனி மிக்ஸியில், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம் மசாலா, மீதம் இருக்கும் மஞ்சள்தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும், அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு ஊறிய சிக்கன் கலவை மற்றும் அதன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி, நன்கு வேக விடவும். மூடியைத் திறந்து கிளறிவிட்டு, மீண்டும் மூடி போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இதில் கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

காரைக்குடி காடை ஃப்ரை

பார்சி சிக்கன் கறி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share