இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் IndiaStandWithUdaystalin ஹேஸ்டேக்!

Published On:

| By Jegadeesh

Hashtag IndiaStandWithUdaystalin is trending in India

சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் பக்கத்தில் #IndiaStandWithUdaystalin என்ற ஹேஷ்டேக் (hashtag)  இன்று (செப்டம்பர் 4) ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ’சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்.

சனாதனம் என்கிற  பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் – சமூக நீதிக்கும் எதிரானது.

சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம்.

எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்” என்று பேசினார்.

இதனிடையே, உதயநிதியின் இந்தப் பேச்சு கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவில் பேசு பொருளாகி வருகிறது.

இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதோடு காங்கிரஸ் இது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 4) பேசிய காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணு கோபால், “ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. ஒவ்வொரு கட்சிகளின் கருத்துகளையும் மதிக்கிறோம்” என்று கூறினார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் பேசு பொருளாகி வரும் சூழலில், இன்று #IndiaStandWithUdaystalin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில்  ஒன்றான எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதில் ஹிதேந்திர பிதாடியா என்பவர், இந்து மதம் ஒரு தொற்று நோய் என்று  டாக்டர் அம்பேத்கர் கூறிய கருத்தை பதிவிட்டு உதயநிதிக்கு ஆதரவாக ஹேஷ்டேக் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் பலர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருவதோடு இந்தி மொழியிலும் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவான தங்களது கருத்துகளை ஹேஷ்டேக் மூலம் பதிவேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பல்லடம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை… ஒருவர் கைது!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகன் அதிரடி பதவி நீக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel