நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நான்சி என்ற சிறுமி பயின்று வந்தார்.
இன்று (ஜனவரி 6) மதியம் தனது தாயுடன் நான்சி தேயிலை தோட்டம் வழியாக வந்துகொண்டிருக்கும் போது சிறுத்தை ஒன்று குழந்தையைத் தாக்கி இழுத்துச் சென்றது.
இதைப் பார்த்த சிறுமியின் தாய் கத்தி கூச்சலிடவே, அங்கிருந்த பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் தேயிலைத் தோட்டத்துக்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும், வனத்துறையினரும் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்
நீண்ட நேரமாக தேடிய நிலையில், தேயிலை செடிகளுக்கு நடுவே குழந்தை ரத்த காயங்களுடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தூக்கிக் கொண்டு ஓடி, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுகாயங்களுடன் சுயநினைவின்றி உயிருக்குப் போராடிய சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பந்தலூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
@supriyasahuias #நீலகிரி #Nilgiri District
Child killed after being attacked by a leopard in Mangorange area of Pandalur… pic.twitter.com/an369ddT3s— Abuthahir Alungal 🇮🇳 (@ThahirDmk) January 6, 2024
நேற்று, பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி அருகே சேவியர்மட்டம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி கீர்த்திகாவைச் சிறுத்தை தாக்கியது. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைச் சிறுத்தை தாக்கியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் குழந்தையை விட்டுவிட்டு சிறுத்தை ஓடிவிட்டது. இதில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ஏலமன்னா பகுதியில் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த சாரதா, துர்கா, வள்ளியம்மா ஆகிய 3 பெண்கள் காலைக்கடன் கழிப்பதற்காக வனப்பகுதி அருகே உள்ள புதர் பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அங்குப் பதுங்கியிருந்த சிறுத்தை மூவரையும் தாக்கியது. இதில் படுகாயமடைந்த சாரதா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச்சூழலில் சிறுத்தை தாக்கி மீண்டும் ஒரு உயிர் பலியாகியுள்ளது.
எனவே இந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க அந்த பகுதி மக்கள் பந்தலூர் பஜார் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்தியாவில் வின்பாஸ்ட் நிறுவனம் என்ட்ரி: தமிழகத்தில் 16,000 கோடி முதலீடு!
களைகட்டிய ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு… பல்சர் பைக் தட்டிச்சென்ற காளையர்!