மதுரையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 16) காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 37 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 15) மதுரையில் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுடன் அமர்ந்து முதல்வர் உணவருந்தி, மாணவர்களுக்கு ஊட்டி விட்டார். இந்தநிலையில், இன்று (செப்டம்பர் 16) தமிழகம் முழுவதும் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 37 பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதன்மூலம் 5,941 மாணவர்கள் பயனடைவார்கள்.
இதற்காக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆறு இடங்களில் பொது சமையல் அறை அமைக்கப்பட்டு, அங்கிருந்து உணவுகள் தயாரிக்கப்பட்டு குறிப்பிட்ட பள்ளிகளுக்கு உணவுகள் வழங்கப்பட உள்ளது. தினமும் காலை 8 மணியளவில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
இன்றைய தினம் காலை சிற்றுண்டியாக மாணவர்களுக்கு ரவா உப்புமா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் 37 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், விரைவில் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
கடலில் கலைஞர் பேனா: ஒன்றிய அரசு முக்கிய முடிவு!