முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா உடல்நல குறைவு காரணமாக மதுரையில் காலமானார். அவருக்கு வயது 76.
உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக சேடப்பட்டி முத்தையா தொடர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (செப்டம்பர் 21) காலமானார்.
1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் சட்டப்பேரவை தலைவராக சேடப்பட்டி முத்தையா பதவி வகித்தார். 1977, 1980, 1984, 1991 என 4 முறை சேடப்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார்.
பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா, 1999 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒன்றிய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியும் வகித்தார்.
2006 ல் அதிமுகவிலிருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா, திமுகவில் இணைந்தார். திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்.
உயிரிழந்த சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
கலை.ரா
கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு 15 நாள் சிறை : அண்ணாமலை கண்டனம்!
பருவமழை முன்னெச்சரிக்கை : ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு!