நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!
நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கனமழையால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று (டிசம்பர் 21) தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பிறகு நெல்லை டவுண் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. காயல்பட்டினத்தில் 94 செமீ மழை பெய்திருக்கிறது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல வட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனை சுற்றி இருக்க கூடிய ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி நகரங்களின் நிலைமை மோசமாக உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே தாமதமாக கிடைத்தாலும், அதில் அளித்துள்ள அளவை விட அதிகமாக மழை பொழிவு ஏற்பட்ட சூழ்நிலையிலும், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. நிவாரண பணிகளுக்கு 10 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 12,653 பேர் மீட்கப்பட்டு 141 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், “ நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும். தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
புதிய குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றம் : அமித் ஷாவுக்கு ப.சிதம்பரம் பதிலடி!
பிக்பாக்கெட் – மோடியை விமர்சித்த ராகுல்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!