உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் பெண் சோப்தார்!
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் ‘சோப்தாராக” லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு 40 சோப்தார் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தியது.
இதில் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதிகளுக்கு பெண் சோப்தார் நியமிக்கும் வகையில் 20 பெண் சோப்தார்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண்‘சோப்தாராக’ திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது, உயர்நீதிமன்றம் மதுரை கிளையிலும் முதன் முதலாக பெண் சோப்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் முதல் பெண் சோப்தாரான லலிதா , பெண் நீதிபதிகளுக்கு செங்கோல் ஏந்தி செல்பவராக செயல்படுவார்.
தற்போது உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி மாலாவிடம் பணியில் உள்ளார். மதுரையை சேர்ந்த பட்டதாரியான லலிதா, தனக்கு இந்த பணி மிகவும் பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள், தங்களது அறையில் இருந்து நீதிமன்றத்துக்கு செல்லும்போது ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி அவர்களுக்கு முன்பாக செல்வது வழக்கம்.
இவர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு தேவையான அன்றாடப் பணிகளையும் செய்கின்றனர். இதுவரை ஆண்கள் தான் சோப்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெண்களும் சோப்தார் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
சிறுத்தைகள் Vs பாமக: பதற்றத்தில் கடலூர்- மெத்தனத்தில் மாவட்ட நிர்வாகம்!
அது மட்டும் தான் தோல்விக்கான காரணமா: கவாஸ்கர் அதிரடி கருத்து!