”தமிழகத்தில் ஜனவரி முழுவதும் தமிழகத்தில் விழாக்கோலம் பெரும் வாய்ப்பு உள்ளது” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13 முதல் 17 வரை சென்னையில் நடைபெறவுள்ள ’நம்ம ஊரு திருவிழா’, சர்வதேச புத்தக திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 31) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பிறகு எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, ”திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஜனவரி 13 முதல் 17 வரை சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா நடைபெற உள்ளது.
ஜனவரி முழுவதும் தமிழகத்தில் விழாக்கோலம் பெரும் வாய்ப்பு உள்ளது. தமிழர்களின் கலைகள் பறைசாற்றும் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
ஏறு தழுவுதல், பன்னாட்டு புத்தக கண்காட்சி, சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை 13ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்” எனத் தெரிவித்தார்.
எம்.பி. கனிமொழி, “சென்னையில் உள்ள 16 பூங்காக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது, சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழாவில், சென்னையில் உள்ள பூங்காக்கள்,
மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, 2011ஆம் ஆண்டின் அதிமுக ஆட்சிக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்த பின்பு, கடந்த பொங்கல் பண்டிகையின் போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை கோலாகலமாக, கிராமிய கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை சாலை, தி.நகர் நடேசன் பூங்கா,
வளசரவாக்கம் ராம கிருஷ்ணன் நகர் மைதானம், கொளத்தூரில் உள்ள மாநகராட்சி மைதானம்,
ராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானம், மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம்,
அண்ணாநகர் டவர் பூங்கா உள்ளிட்ட 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
4 நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை 30 நிமிட இடைவெளியில் நடனம், இசை நிகழ்ச்சிகள் என்று பலவகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
ஜெ.பிரகாஷ்
துனிஷா தற்கொலை: வெளியான காதலனின் ரகசியம்!
கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து!