திருவாரூரில் கர்ப்பிணிக்கு நடந்த விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். ஐந்து மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று(அக்டோபர் 6) மருந்து கொடுக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணி உள்பட 20-க்கும் மேற்பட்டோர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 15 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், வேளுக்குடியைச் சேர்ந்த செல்வ முருகன், மாரியம்மாள், செல்வகணபதி, பாலாஜி, சந்துரு ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் செல்வமுருகன் (24) சிகிச்சை பலனின்றி இன்று (அக்டோபர் 7) காலை உயிரிழந்தார். சிகிச்சையில் உள்ளவர்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிக்கு நடந்த விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலை.ரா
3 சிறுவர்கள் பலி: திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது!
ராக்கெட் ராஜா திருவனந்தபுரத்தில் கைது!