கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், தொன்மைப் பொக்கிஷமாக, தமிழர் பெருமை பேசும் வகையில் அற்புதமான பல்வேறு அம்சங்கள் பெற்று அமைக்கப்பட்டுள்ளது கீழடி அருங்காட்சியகம்.
அகழாய்வுகள் மூலம் கீழடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 4,429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 89 ஆட்டக்காய்கள் உள்ளிட்ட தொல் பொருட்கள் உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில், ரூ.18 கோடியே 43 லட்சம் செலவில், தமிழக மரபுசார் கட்டிடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 5 ஆம் தேதி திறந்து வைத்து பார்வையிட்டார்.

கிட்டதட்ட 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட கட்டணம் ஏதுமில்லாமல் இலவசமாக அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1) முதல் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, பெரியவர்களுக்கு ரூ,15, 6 முதல் 12 வயது உள்ளவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிழற்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
வைக்கம் நூற்றாண்டு விழா: ஸ்டாலின் கேரளா பயணம்!