பெரிய குளத்தில் இளம் பெண்ணான பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் நாராயணசாமி- சுமித்ரா தம்பதி.
இவர்களது ஒரே ஒரு மகள் மதுமிதா (26 வயது). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
மகளின் மருத்துவப் படிப்பு மற்றும் புதிதாக வீடு கட்ட வாங்கிய கடன் என நாராயணசாமிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மதுமிதாவின் தந்தை நாராயணசாமி கடந்த ஓராண்டிற்கு மேலாக வேலைக்கு ஏதும் செல்லாமல், தொடர்ந்து மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மதுமிதாவின் தாய் தந்தை இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கணவருடன் ஏற்பட்டு வந்த தகராறின் காரணமாக மதுமிதாவும், அவரது தாய் சுமித்ராவும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
கடந்த 26 ஆம் தேதி பயிற்சி மருத்துவரான மதுமிதா பூச்சி மருந்து விஷத்தை சாப்பிட்ட நிலையில் தாய் சுமித்ரா சர்க்கரை நோய் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
தகவல் அறிந்த உறவினர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு போராடி வந்த தாய் மகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த மதுமிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தாய் சுமித்ரா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தங்களுடைய தற்கொலைக்கு காரணம் தந்தை நாராயணசாமியும், அவரது உறவினர்களும்தான் என்று மதுமிதா கடிதம் எழுதி வைத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் தொல்லை மற்றும் தந்தையின் குடிப்பழக்கத்தால் பல உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா