நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் இன்று (ஜனவரி 24) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தலைஞாயிறு கமல்ராமன் தலைமையேற்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றுப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “2022-ற்குள் விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் மோடி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
இன்று வரையிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் சட்டத்தை திரும்ப பெற்று விட்டதாகவும் போராட்டத்தைத் திரும்ப பெரும் பட்சத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.
அதனை ஏற்றுப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுவரையிலும் வாய் திறக்க மறுக்கிறார். சட்டத்தைத் திரும்பப் பெற்றதாக அறிவித்தாரேயொழிய அது குறித்து தெளிவான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. பிப்ரவரி 1ல் மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
எனவே, விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் மோடி அரசுக்கு எதிராக மார்ச் 1 ஆம் தேதி குமரி முதல் டெல்லி நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் நீதிகேட்கும் நெடும்பயணத்தைத் துவக்க உள்ளோம்.
பாரதிய ஜனதா கட்சி தவிர்த்து கேரளா, தமிழ்நாடு தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்காளம், பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 12 மாநில முதலமைச்சர்களைச் சந்தித்து விவசாயிகளுக்கு ஆதரவு கோர உள்ளோம்.
லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த உள்ளோம்.
நிறைவாக மார்ச் 21ஆம் தேதி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நீதி கேட்கும் நெடும் பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம்.
இந்த பயணத்தில் தேசிய அளவிலான பல்வேறு சங்கங்களின் தலைவர்களுக்கு பங்கு கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகப்பட்டினத்தில் இருந்து பங்கேற்க முடிவு செய்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, ஈரோடு இடைத்தேர்தலில் விவசாயிகள் சங்கத்தின் நிலை என்ன என்ற செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்ற தவறியதால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் பாஜக ஆட்சிக்கு எதிராகக் கோபத்தில் உள்ளனர்” என்றார்.
மோனிஷா
நியூசிலாந்திற்கு மீண்டும் இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா
நடிகர் விஜயை பாராட்டிய கனடா மேயர்!