உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 13) குடும்ப அட்டை குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
பொது விநியோகத் திட்டம் மூலம் மக்களுக்கு செய்துதரப்படும் சேவைகளை உறுதி செய்யும் நோக்கில், தமிழகம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் சனிக்கிழமை இந்த முகாம்கள் நடத்தப்படுவதால் ஆகஸ்ட் மாதத்திற்கான் முகாம் இன்று நடைபெறுகிறது.
சென்னையில் 19 இடங்களில்
தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம் சென்னையில் மட்டும் 19 மண்டலங்களில் உள்ள மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

என்னென்ன குறைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை பதிவு செய்தல், குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் செய்துதரப்படும்.
மேலும், பொருட்கள் வாங்குவதற்கு நியாயவிலை கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத மூத்த குடிமக்கள், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் இந்த முகாம் மூலம் வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவைகளின் குறைபாடுகள் குறித்து மக்கள் இந்த முகாமில் புகார் அளிக்கலாம். புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த முகாம் மூலம் மக்கள் தங்களது குறைகளை இலவசமாகவே தீர்த்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
மோனிஷா
வேலைவாய்ப்பு : ரூ.1,38,500 ஊதியத்தில் பணி… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!