கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இன்று (செப்டம்பர் 6) அம்மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று கோவை மாவட்டத்தில் அனைத்துச் சாலைகளும் பழுதடைந்து இருக்கின்றன.
சரியில்லாத சாலைகளால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. அதை, இந்த அரசு முதலில் சரிசெய்ய வேண்டும். நாங்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் கோரிய 500 சாலைகளை இந்த அரசு ரத்து செய்தது.
அவைகளையும் இந்த அரசு சரிசெய்ய வேண்டும். அதுபோல் அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சியில் பாலம் கட்டும் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன. கோவையில் அதிமுக அரசு 50 ஆண்டுக்கால வளர்ச்சியைத் தந்திருக்கிறது.
ஆனால், திமுக அரசு இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் எதுவுமே செய்யவில்லை. மேலும் திமுக அரசு அத்திக்கடவு – அவினாசி குடிநீர் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை உள்நோக்கத்துடன் நிறுத்திவைத்துள்ளது திமுக அரசு.
கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் நிலைய பணிகள் கிடப்பில் உள்ளது. இவற்றையெல்லாம் திமுக அரசு விரைந்து செய்ய வேண்டும்” என்றார்.
வேலுமணிக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்! தமிழக அரசு எதிர்ப்பு!