திருச்சியில் தாய் தலைமை ஆசிரியையாக உள்ள பள்ளியில் உள்ள மாணவிகள் விடுதிக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக பள்ளிகளிலேயே சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி முகாமில் பங்கேற்ற 12 வயது சிறுமி ஒருவரைத் தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறி கொண்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதையடுத்து, சிவராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவராமனின் தந்தையும் விபத்தில் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பல சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் திருச்சியில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கிரேஸ் என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, சாம் டானியல் என்ற 31 வயது மகன் உண்டு. டாக்டரான இவர், தனது தாயார் தலைமை ஆசிரியையாக இருக்கும் பள்ளியின் மாணவிகள் விடுதிக்குள் புகுந்து சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி சைல்டு லைனுக்கு போன் வழியாக கொடுத்த தகவலின் பேரில், டாக்டர். சாம் டானியல் கைது செய்யப்பட்டார். இவரின், தாயார் கிரேசும் மகனுக்கு உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல மாதங்களாக அந்த சிறுமியை சாம் டேனியல் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அசோக் நகர் பள்ளி விவகாரம் – 4 நாட்களில் ஆக்ஷன் – அன்பில் மகேஷ் பேட்டி!