ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 28) அடிக்கல் நாட்டினார்.
இங்கு ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது!
டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இந்த விழாவில் பங்கேற்று இருப்பது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பது அவருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே இது கிடைத்திருக்கக்கூடிய பெருமை!
வேளாண் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்த இவர், இந்தளவுக்கு உயர அவருடைய தன்னம்பிக்கையும், அறிவாற்றலும்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள டாடா குழும நிறுவனங்களை குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “டாடா மோட்டார்ஸ் தன்னுடைய திட்டத்திற்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தற்காக நான் முதலில் நன்றி சொல்கிறேன்.
ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததுடன், ஐந்தாயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்க இருக்கிறது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து, திறப்பு விழாவிற்கும் சந்திரசேகரன் வரவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் என்னுடைய வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, இன்னொரு வேண்டுகோளும் உண்டு! உங்களுடைய நிறுவனங்கள் மூலமாக கூடுதல் முதலீடுகளை நீங்கள் தமிழ்நாட்டில் செய்யவேண்டும். செய்து கொண்டிருக்கிறீர்கள். அதை நான் மறுக்கவில்லை; அது உங்கள் கடமை. ஏனென்றால், இது என் மாநிலம் அல்ல, உங்கள் மாநிலம் அல்ல; நம்முடைய மாநிலம். இது உங்களுடைய மாநிலம்.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புறேன். 1973ஆம் ஆண்டு கலைஞர் இதே ராணிப்பேட்டையில்தான் முதல் சிப்காட்டை தொடங்கினார்.
ஐம்பது ஆண்டுகள் கடந்து, இங்கே பல்வேறு நிறுவனங்களை பார்ப்பது பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம்! அதுமட்டுமல்ல, E-Vehicle-களின் தலைநகரம்!
ஃபோர்டு, ஹூண்டாய், ரெனோ நிஸான் என்று சர்வதேச வாகன நிறுவனங்களும் இங்கே இருக்கிறது. டாடா மாதிரி சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்ற வாகனங்களை தயாரிக்கின்ற தொழிற்சாலையும் இங்கேதான் இருக்கிறது.
கூடுதல் தகவல், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன்! இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
தம்பி சாப்பாட்டுக்கு என்ன செய்யுற? விஸ்வநாதன் ஆனந்த் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்!
ஒசூர் டாடா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!