அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனு நாளை(ஆகஸ்ட் 23) விசாரிக்கப்படுகிறது.
ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி உத்தரவிட்டது.
பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். மேலும் பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பின் உத்தரவு நகல் இல்லாமலே மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கவேண்டும் என்று எடப்பாடி தரப்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தீர்ப்பின் இணையதள நகலை வைத்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.
இதன்மூலம் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட 2 உத்தரவு மற்றும் ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட 1 உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் நாளை முதல் விசாரிக்க இருக்கிறது.
கலை.ரா