சென்னை அருகே நேற்று (ஜூன் 16) அதிகாலை நடந்த ஆட்டோ பந்தயத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள வழுதிகைமேடு – அருமந்தை பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த மணி (வயது 22), திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஷியாம் சுந்தர் (வயது 24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் (வயது 30), கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 22), மாங்காடு பகுதியை சேர்ந்த ஜேபேயர் (வயது 20) ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில், “மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் 8 ஆட்டோக்களுக்கு இடையே பந்தயம் நடந்தது தெரியவந்துள்ளது.
அந்த பந்தயத்தை காண இருசக்கர வாகனங்களில் பலர் சென்றுள்ளனர். வேகமாக சீறிபாய்ந்த ஆட்டோக்களில் ஒன்று கவிழ்ந்தபோது, பின்னால் சென்ற இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ரூ.1,100க்கு இந்த பந்தயம் நடந்ததும், வாரத்தில் ஒரு முறை இதுபோன்ற பந்தயம் நடைபெறுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரியவந்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மேற்கு வங்கம் ரயில் விபத்து: நிவாரணம் அறிவித்த மத்திய அரசு – காங்கிரஸ் கண்டனம்!