பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் செய்யும்போதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை அமல்படுத்துகின்ற போதும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் தேவைப்படுகிறது.
எனவே, அரசுப்பள்ளிகளில் தற்போது 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும். இந்த பணிகளை வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல், ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்” எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மின்னஞ்சலை எவ்வாறு பயன்படுத்துவது என்று மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் உங்களுக்கென புதிய மெயில் ஐ.டியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
மோனிஷா
மக்கள்தொகை பெருகக் காரணம்: நிதிஷ் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு!