சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக ட்ரோன்கள் மற்றும் இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மனிதர்கள் செல்ல கடினமாக உள்ள நீர்வழிப்பாதைகளில் கொசுப் புழுக்களை ஒழிக்க சோதனை முறையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
அது பலன் கொடுக்கவே, கடந்த ஆண்டு வாடகைக்கு ட்ரோன்கள் பெறப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில், கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூபாய் 98 லட்சம் மதிப்பிலான புதிய 6 ட்ரோன் இயந்திரங்கள் மற்றும் 200 மருந்து கைத்தெளிப்பான்களை கொள்முதல் செய்துள்ள சென்னை மாநகராட்சி, இன்று முதல் கொசு ஒழிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தவுள்ளது.

இதனை சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ட்ரோன் இயந்திரத்தை இயக்கி கொசு ஒழிப்புப் பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் கொசுத்தொல்லை இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா