சேலம் இரும்பாலை பிரச்சினை: 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Minnambalam

சேலத்தில் இரும்பாலை பிரச்சினை தொடர்பாக வரும் 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் இரும்பாலையை – வெறும் உருக்காலையாக மாற்றியபோதே, திராவிடர் கழகம் போராடியது.

அதன் பிறகு தனியார்மயப் பாம்பு, புற்றிலிருந்து தலைகாட்டியவுடன் அதனை திராவிடர் கழகம் போராட்டத் தடிமூலம் புற்றுக்குள் தள்ளியது.

இப்போது மீண்டும் துணிந்து அது அதானி, அம்பானிகளுக்கு – கார்ப்பரேட்டு கன முதலாளிகளுக்கு மடை மாற்றம் செய்ய ஆயத்தமாக்கப்படும் அநியாயம் அரங்கேறவிருக்கிறது.

இதனைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும், அத்துணைக் கட்சி அமைப்பினரும் ஓரணியில் நின்று, ஒன்றுபட்டுக் குரல் எழுப்பித் தடுப்பணை எழுப்பியாகவேண்டும்.

அதற்கு முன்னோட்டமாக 30ஆம் தேதி சேலத்தில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் மத்திய அரசின் பணிமனை முன்பு நடத்தும். தடுப்பு நடவடிக்கைக் கண்டனக் குரல் டெல்லி வரை கேட்கும் வகையில், அனைத்து பொறுப்பாளர்களும் பிரச்சாரம், சுவரெழுத்து உட்படச் செய்ய தொடங்குங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

”இந்தியாவுக்கு இப்போ இரண்டு தேசத் தந்தைகள்” – அம்ருதா ஃபட்னாவிஸ்

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் சால்னா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel