நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பண்ணை பள்ளி வகுப்புகள் இன்று (நவம்பர் 18) முதல் தொடங்க உள்ளதாக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதில், “திருப்பூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை அகில இந்திய வானொலி சார்பில் உற்பத்தியை பெருக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள் எனும் தலைப்பில் வானொலி பண்ணை பள்ளி வகுப்புகள் இன்று முதல் வாரந்தோறும் ஒரு வகுப்பு என மொத்தம் 13 வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக பயிற்சியின் இறுதியில் நேரடியாக பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், பயிற்சி கையேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்படும். இந்த பண்ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பண்ணை பள்ளி வகுப்புகளுக்கான கட்டணத்தை இம்மையத்தின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணைய வங்கி சேவை வழியாகவோ செலுத்தலாம். இணைய வழியில் கட்டணம் செலுத்தியவர்கள் அலுவலக மின்னஞ்சல் முகவரியில் உரிய பணப் பரிவர்த்தனை எண்ணுடன் தங்களுடைய பெயர், முழு முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகிய தகவல்களை சேர்த்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9443551869, 9442350740, 0421-2248524 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்