பணிக்கு நேரத்துக்கு வராத மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 27) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மருத்துவர்கள் பணியில் இல்லாதது தெரியவந்தது. எனவே, பணியில் இல்லாத மருத்துவர்களுக்கு ‘சார்ஜ் மெமோ’ வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை, “அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (27.08.2023) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துணை இயக்குனருக்குக்கு உத்தரவிட்டார்.
மருத்துவமனை ஆய்வின் போது அங்கு நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் மருந்து பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு சரிவர பாதுகாப்பின்றி இருந்ததை பார்த்த அமைச்சர், அங்குள்ள செவிலியரிடம் விசாரித்த போது அந்த வாகனத்தின் ஓட்டுனர் பணிக்கு வரவில்லை என்று தெரிவித்தார், அந்த வாகனத்தில் இருந்த மருந்துகள் பாதுகாப்பின்றி இருப்பதை கண்டஅமைச்சர் அலட்சியத்தன்மையுடன் பணியாற்றியதை அறிந்து, அந்த ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாய்க்கடி மற்றும் பாம்புகடி மருந்துகள் கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் தேவைக்கேற்ப அறிந்து பயன்படுத்தும் வகையில், அதற்குரிய மருந்து இருப்பு அறிவிப்பு பலகைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைக்குமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநருக்கு அறிவுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
பிரதமர் மோடிக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்: சீமான் அதிரடி!<மதுரை ரயில் தீ விபத்து: கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் மீட்பு!