தமிழகத்தில் நாளை (ஜூன் 14) இரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதித்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பேருந்துகள், ரயில்கள் மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி என மாநிலத்தின் முக்கிய மாநகரங்களுக்கு பயணிகளின் வசதிக்கேற்ப, சொகுசான போக்குவரத்து சேவைகளையும் ஆம்னி பேருந்துகள் வழங்கி வருகின்றன.
அதேநேரம், வார இறுதி விடுமுறைகள், பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலித்து சட்ட விதிமீறல்களில் ஈடுபடுவதாக தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
மேலும், தமிழ்நாடு போக்குவரத்து சட்டத்தின்படி, தமிழ்நாடு பதிவெண் கொண்ட பேருந்துகள் மட்டுமே இங்கு இயக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளும், அஸ்ஸாம், நாகலாந்து போன்ற வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளும் தமிழகத்தில் அதிகமாக இயக்கப்பட்டு வந்தன.
இதுகுறித்த விசாரணையில், தமிழ்நாடு பதிவெண் இல்லாத 652 ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. இதனால், தமிழக அரசிற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.28.16 கோடி இழப்பீடு ஏற்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
மேலும், தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க கூடாது என்றும், அப்படி இயங்க வேண்டுமானால் தமிழ்நாடு பதிவெண்ணிற்கு மாற்ற வேண்டும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டு, அதற்குரிய அவகாசமும் கொடுக்கப்பட்டது.
இதில், கணிசமான ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தங்கள் பேருந்துகளின் பதிவெண்ணை தமிழ்நாடு பதிவெண்ணாக மாற்றினர். இருந்தபோதும், அநேகமான ஆம்னி பேருந்துகளில் பதிவெண் மாற்றப்படவில்லை.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் நாளை (ஜூன் 14) நள்ளிரவோடு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும், பயணிகள் தங்களின் பயணத்துக்கு இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது.
இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பேருந்துகள் போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன.
இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏஐடிபி வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் ஜூன் 13 முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.
அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப இந்த பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், மோட்டார் வாகனத்துறை, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, TN என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்துக்குள் இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன.
மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன. எனவே வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச்சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது.
எனவே முறையற்ற வகையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும்தவிர்க்க வேண்டும். மீறி பயணம்செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின்போது காண்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூத்துக்குடி: உள்ளாட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை… மீண்டும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!